கலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பளச் சான்றிதழ் (pay slip)
>> Thursday, 21 August 2008
இது கதையல்ல உண்மை!
என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பருக்கு 2 வாரங்களுக்கு முன் ஒரு பெண் பார்த்தார்கள்.
அந்த பெண் முதுகலை (PG) படித்திருப்பதாகவும், சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் என் நண்பர்.
மாப்பிள்ளை அமெரிக்காவில் இருப்பதால், அவரும், பெண்ணும் அவரவருடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.
மாப்பிள்ளைக்கு பெண்ணின் புகைப்படம் பிடித்திருந்தது, பெண்ணுக்கும் மாப்பிள்ளையின் புகைப்படம் பிடித்திருந்தது.
மாப்பிள்ளை வீட்டார்கள், மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் ஜாதகங்களை ஒப்பிட்டு, ஜோசியக்காரரிடம் இருந்து நற்சான்றிதழ் பெற்றுவிட்டார்கள்.
மாப்பிள்ளை, பெண்ணை அவரது கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டு முன்னுரை கொடுத்தார்.
இதற்கிடையில் பெண்ணின் நெறுங்கிய உறவினர்கள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவர்கள் மாப்பிள்ளையை தொடர்புகொண்டு பேசுவார்கள் என்றும் என் நண்பருக்கு தகவல் தெறிவிக்கப்பட்டது.
பெண்ணின் பெரியப்பா மகன் ஒருவர் மாப்பிள்ளையை தொடர்புகொண்டு, அவரைப்பற்றி விசாரித்துள்ளார். அவரின் முதல் தொடர்பின் போது கேட்ட கேள்விகள்...
1. நீங்கள் எங்க வேலை பார்க்கிறீர்கள்?
2. உங்களுடைய சம்பளம் எவ்வளவு?
3. உங்களின் வங்கி நிலுவைத்தொகை எவ்வளவு?
4. இதுவரை சம்பாதித்து என்ன சேர்த்து வைத்துள்ளீர்?
மறுநாள் இதைப்பற்றி நண்பர் என்னிடம் கூறும்போது எனக்கு கடும் கோபம் வந்தது. இருப்பினும் நண்பர் அது பரவாயில்லை என்று வாதிட்டார்.
இதற்கிடையில், நண்பரின் வீட்டிலிருந்து அவருக்கு இன்னொரு தகவலும் வந்தது. பெண்ணின் பெரியப்பா மகனை நேரில் சென்று (வாஷிங்க்டன் டி சி), பார்த்து வரும்படி கூறினார்கள்.
இந்த வார இறுதியில் வாஷிங்க்டன் டி சி சென்று வர திட்டம் தீட்டினார் நண்பர். என்னையும் அழைத்தார். வீட்டில் இருப்பதைவிட அவரோடு சென்று வரலாமென நினைத்து அவரது அழைப்புக்கு ஒப்புதல் தெறிவித்தேன்.
2 நாட்களுக்கு முன் அந்த பெண்ணின் "பெரியப்பா மகன்" நண்பரை தொடர்புகொண்டு, அவர் டெக்சாசில் இருப்பதாகவும், இந்தவாரம் பார்க்க இயலாது என்றும் தெறிவித்துள்ளார்.
அத்தோடு மட்டுமல்லாமல், நண்பருடைய, 3 மாதங்களுக்கான சம்பள ரசீதையும் (pay slips for last 3 months) கேட்டுள்ளார்.
அப்போதுதான் நண்பருக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது. அடுத்த வார்த்தை பேசாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார்.
அன்றிரவு நண்பர் தூங்கவில்லை ! (எதிர்பார்த்ததுதான்)
மறுநாள் காலை என்னிடம் ஓடி வந்து நடந்ததை கூறினார். என்ன செய்வதென்று தெறியாமல் இருந்தார்.
"நான் மாப்பிள்ளை வேலை தேடவில்லை, எனக்கு இருக்கின்ற வேலை போதும், உங்கள் வீட்டு வேலை தேவையில்லை!" என்று கூறிவிடுங்கள் என்று கூறினேன்.
அதைத்தான் செய்யப்போகின்றேன் என வழிமொழிந்தார். அதை செய்தும் முடித்தார்.
ஒரு ஆண், அல்லது பெண்ணிடம் அவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்று கேட்கலாம். அப்பணி நிரந்தரமா? அல்லது ஒப்பந்தப்பணியா என்றும் கேட்கலாம்.
ஆனால், அதையும் தாண்டி, சேமிப்பு வைப்புநிதி எவ்வளவு? சம்பளச்சான்றிதழ், கடன்றிக்கை போன்றவைகளை கேட்பது கலிகாலமல்ல, எதிர்காலத்திலும் நம் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல!